வீழும் ரியல்எஸ்டேட்

கடந்த சில வருடங்களாக பூதாகர வளர்ச்சி கண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை இப்போது சரிந்து கொண்டு வருகிறது.போன வருட இதே கால சூழலை ஒப்பிடும் போது இன்றைய சூழலில் 10-25% வரை தமிழகம் முழுக்க நகரை பொறுத்து விலை இறங்கி உள்ளது.

 போன சட்டமன்ற தேர்தலின் பின் தள்ளாடிகொண்டிருந்த ரி.எ.துறை  எரிபொருள், அத்யாவசிய பொருள், கட்டுமான பொருள், போக்குவரத்து போன்ற விலையேற்றத்தால் நல்ல சரிவை காண ஆரம்பித்துள்ளது. MP தேர்தலின்பின் இந்தியாவுக்குள் வந்த கறுப்பு பண முதலீடுகள் வந்து சேர்ந்து முடிந்தபடியால் புதிய வாங்குதல் நின்று போனதும், அரசியல்வாதிகளின் மேல் வரும் நில ஊழல் புகார்களாலும் அவர்களின் ரி.எ.முதலீடுகள் நின்று போயின. ரி.எ எழுச்சியால் பெரிய அளவில் பயனடைந்தவர்கள் அரசியல்,பெரிய அதிகாரிகள் மற்றும் பணமுதலைகளின் அல்லக்கைகள்தான் என்பதை கொண்டே எந்த பணம் விளையாடியதென்பதை அறியலாம்.

 மோசமான பொருளாதார சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தினசரி செலவுகளுக்கு முணகும் மக்களால் முதலீடு பற்றி யோசிக்க முடியவில்லை. இதில் ஆச்சரியம், லட்சுமிகர IT ஊழியர்களும் இதே புலம்பலை ஆரம்பித்துள்ளது தான். விவசாயத்தில் உர விலையேற்றம், 100 நாள் திட்டத்தால் கூலி உயர்வு/ஊரக தொழில்துறை பாதிப்பு, மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, நெசவில் சீன போட்டி, சாய கழிவு, நூல் விலையேற்றம் என அனைத்து துறைகளும் படுத்துவிட்டது.

இவற்றை முன்கூட்டியே அறிந்த தேசிய ரி.எஸ்டேட் பெருநிறுவனங்கள் போன தீபாவளியின் போதே 20% தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது ஞாபகமிருக்கும்.

 புதிய கட்டுமான பணிகளும் இதே வேகத்தில் குறைந்துள்ளது. தற்போது வாங்குவதை விட 6 மாதங்கள் முடிவை தள்ளி போடுவதால் நிலவிலைகளும் கட்டுமான பொருள் விலையும் பெருமளவு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விலை வீழ்ச்சியால் வீடு என்பதை கனவாக நினைத்த மக்கள் மனதில் சிறு நம்பிக்கை துளி ஏற்பட்டுள்ளது.

 எது எப்படியோ, கோயில், ஏரி-குளம், விளைநிலம், பள்ளி என்று மயானம் முதல் மந்தைவெளி வரை கற்களை நட்டு கூறு போட்ட ரி.எஸ்டேட்காரர்களிடம் இருந்து மிஞ்சியுள்ள நிலங்கள் தப்பித்தன.
-N.Sasikumar